Thursday 13 December 2012

குருவாரம் குருவார்த்தை-6

*(2012 டிசம்பர் 14-16 வரை ஸ்ரீ பாலரிஷி விஸ்வசிராசினி பாலா பீடத்தில மஹாகுரு பூஜை நிகழ்கிறது. இந்தப் புனிதம் பொழுதில் குருமார்கள் குறித்து பாலரிஷி அவர்கள் தரும் விளக்கங்களின் ஒருபகுதி, சமீபத்தில் வெளியான பாலரிஷி அவர்களின் "சித்தர்கள் தரும் சிவானந்தம்"  நூலிலிருந்து உங்களுக்காக}


*
நான் என்ற அடையாளத்தில் குரு கைவைக்கும்போது அவருக்கு நிறைய பிரயத்தனம் தேவைப்படுமா?*

         அது அந்த உயிரின் பக்குவத்தைப் பொறுத்தது.பழுத்த பழங்கள் மெல்லிய காற்றுக்கே உதிர்ந்துவிடும். சில பழங்களைப் பறிக்க மரத்தையே உலுக்க வேண்டிவரும்.சிலர் குருவை மனம்திறந்து ஏற்றுக் கொள்வார்கள்.சிலரிடம் குரு அவர்களின் சில தவறுகளையோ இயல்புகளையோ சுட்டிக்காட்ட வேண்டி வரும்.அவர்களின் "நான்" என்ற தன்மை குறையும் விதமாய் சில அனுபவங்களைத் தர வேண்டியிருக்கும். எனவே ஒவ்வொருவருக்கும் ஏற்ப குருவின் அணுகுமுறை மாறுபடும்.

முந்தைய பிறவியிலேயே ஆன்மீகத் தொடர்பு உள்ளவர்களை குரு எளிதாகக் கையாள முடியும்.சிலருக்கு வாழ்வில் ஏற்படும் வலிகளை நீக்குவதுதான் குருவின் வேலை என்னும் எண்ணம் இருக்கிறது.குருவின் வேலை உங்கள் வலிகளை நீக்குவதல்ல.வலிகள் வழியாக வாழ்க்கையை உணரும் பக்குவத்தையும் தெளிவையும் கொடுப்பவர்தான் குரு.

கடந்த பிறவிகளில் அன்னதானம் செய்தவர்கள்,சாதுக்களுக்கு சேவை செய்தவர்கள் எல்லாம் அடுத்த பிறவியில் நல்ல குரு அமையப் பெறுவார்கள்.இவர்களில் ஒருசிலருக்கு தங்களுக்கு நல்ல குரு கிடைத்துவிட்டார் என்கிற தெளிவு கூட இருக்காது.தங்களுக்குத் தரப்பட்டிருக்கும் ஆத்ம சாதனைகள் பலன் தருமா என்கிற குழப்பம் வரும்.சிலருக்கு தங்கள் குருவின் மீதுகூட சந்தேகம் வரும்.இவர்களை நெறிப்படுத்துவதற்குத்தான் குருவானவர் மிகவும் பிரயத்தனப்படுவார்.

No comments: