Thursday 11 July 2013

குருவாரம் குருவார்த்தை-36



உத்தர்காண்ட்டில் ஏற்பட்ட உயிர்சேதம் உலகையே உலுக்கியிருக்கிறது. இறைநம்பிக்கையுடன் சென்றவர்களுக்கு இந்தகதி ஏன்என்கிற கேள்வி பலருக்கும் எழுகிறது. இதுகுறித்து தங்கள் கருத்து என்ன?

இமயமலை கேதார்நாத் போன்ற இடங்களுக்கான புனித யாத்திரைகள் முன்பெல்லாம் தீவிரமான ஆன்மீகத் தேடல்கொண்ட மிகச்சிலரால் பாதயாத்திரையாக மேற்கொள்ளப்படும். இப்போது சாலை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் மூலம் இத்தகைய புனிதத் தலங்கள், சுற்றுலாத் தலங்களாகிவிட்டன.

உத்தர்காண்ட் சம்பவம் இருவேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. ஒன்று இயற்கை சார்ந்த பார்வை.இன்னொன்று,தெய்வீகம் சார்ந்த   பார்வை. இயற்கையை    மாசுபடுத்திவிட்டு,    இயற்கையின்    இருப்பை அலட்சியப்படுத்திவிட்டு எல்லாம் நம் தேடல்போல் நடக்கும்  என்று கருதுவதில் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோம் என்பதற்கு உத்தர்காண்ட் ஒரு சாட்சி.

இறை நம்பிக்கையுடன் சென்றவர்கள் இறந்துவிட்டார்களே,அவர்கள்மேல்
இறைவனுக்குக் கருணையில்லையா என்று கேட்பவர்கள் ஒருபுறம். அந்தத் தேதியில் அங்கே இருப்பதாக திட்டம்.பயணம் ரத்தாகிவிட்டது.கடவுளுக்கு என்மேல் கருணை அதிகம் என்பவர்கள் மறுபுறம்.இரண்டிலுமே உண்மை இல்லை.நடந்ததொரு விபத்து. அங்கே இறந்தவர்களின் உயிர்நிலை அவர்களின் பிறவி சுழற்சி போன்றவற்றில் கடவுள் நிச்சயம் கருணை காட்டுவார். அதற்காக விபத்திலிருந்து தப்பித்தவர்கள்மேல் மட்டும்தான் கடவுளுக்கு கூடுதல் கருணை என்று நினைப்பது அபத்தம்.
 
பிரளயம் எழுந்தது,உலகின் பெரும்பகுதி அழிந்தது என்றெல்லாம் புராணங்களில் சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
.
இயற்கையை அலட்சியப்படுத்தி அழிவுகளை நிகழ்த்துகிற மனிதன் இயற்கை பதிலுக்கு சின்னதாய் சீறினால் கூட தாங்கிக் கொள்ளத் தகுதியற்றவன். எந்தநேரமும் நிலச்சரிவுகளுக்கான சாத்தியக்கூறுகள் கொண்ட கன்னிநிலப் பகுதிகளை இன்னும் எச்சரிக்கையாகக் கையாண்டு இயற்கைக்கு  உரிய  மரியாதையை மனிதர்கள் தரவேண்டும் என்பதே உத்தர்காண்ட் நமக்கு உணர்த்தும் பாடம்.

No comments: