Thursday 25 July 2013

குருவாரம் குருவார்த்தை-37

 
ஆத்ம சாதகருக்கு குருபக்தி மிகவும் இன்றியமையாதது என்கிறார்கள். இதுகுறித்து தாங்கள் விவரிக்க முடியுமா?

வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் பலரும் உங்களுக்கு எத்தனையோ விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். முக்கியமான நிலைகளில் வழிகாட்டியிருப்பார்கள். இவர்கள் உங்கள் ஆசிரியர்கள், வழிகாட்டிகள். எப்போதும் உங்கள் மதிப்புக்கும் நன்றிக்கும் உரியவர்கள். ஆனால் இந்த நிலைகளையும் கடந்தவர் குரு. குரு என்ற சொல்லுக்கே அறியாமை இருளைப் போக்கி ஞான வெளிச்சத்தைத் தருபவர் என்றுதான் பொருள். உங்களுக்கு உள்நிலையில் எவ்வளவோ கேள்விகளும் தேடல்களும் இருக்கலாம். ஆனால் முதன்முதலாக உங்கள் குருவை சந்தித்த மாத்திரத்தில் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் தேடல்களுக்கும் பதிலளிக்கப் போகிறவர் அவர்தான் என்பது புலப்படும். உங்களுக்குரிய பாதை எதுவோ அதில் உங்களை வழிநடத்தப் போகிறவரும் அவரே.

குருவின் அருள் மிகவும் மங்கலகரமானது.ஏனெனில் உங்கள் வாழ்வில் ஏற்படும் எத்தனையோ தடைகளை அது நீக்கவல்லது. இதனை நுட்பமாக உணர வேண்டுமானால் வாழ்வில் தங்களுக்கென்று ஒரு குரு அமையப் பெறாதவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே புரியும். ஒரு குரு வாய்க்கப் பெறாதவர்கள், எத்தனையோ விஷயங்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக அவர்களுக்கு ஜோதிடத்தின் உதவி தேவைப்படுகிறது. கர்மவினையால் முற்றிலும் வழிநடத்தப்படுகிறார்கள். ஆனால் குருவின் அருள் உங்களை இந்தத் தடைகளிலிருந்தும் தளைகளிலிருந்தும் விடுவிக்கும். அதேபோல ஒருவரை அவருடைய குருவை அண்டவிடாமல் பிரித்து வைத்திருப்பது அவருடைய அகங்காரம்தான். குருவின் முன்னிலையில் உங்கள் அகங்காரம் உடைவதையும் அப்படி உடைவதை நீங்கள் விரும்புவதையும் உணர்வீர்கள். மற்ற இடங்களில் அகங்காரம் சிறிது காயப்பட்டாலும் உங்களால்  பொறுக்க முடியாது. ஆனால் உங்கள் குருவின் முன்னிலையில் நீங்கள் தாமாக முன்வந்து அகங்காரத்தை விட்டுத்தந்து அதன்விளைவாக நிகரற்ற அமைதியையும் தெளிவையும் பெறுவீர்கள்.

எப்போது நீங்கள் உங்கள் குருவின் எண்ணங்களுக்கும் சங்கல்பங்களுக்கும் கருவியாகிறீர்களோ,அப்போது உங்களுக்கு குருவின் அனுக்ரஹம் முழுமையாகக் கிட்டியிருப்பதாகப் பொருள். முழுமையான சிரத்தையோடும்
உறுதியோடும் அவற்றை நீங்கள் மேலெடுத்துச் செல்லும்போது, குருவின் கரங்களில் உங்களை முழுமையான கருவியாக ஒப்புவிக்கிறீர்கள். உள்நிலையில் ஏற்படும் மகத்தான நிலைமாற்றத்தால் உங்களுக்குள் மலரும்
பேரானந்தம் குருபக்தியின் விளைவாக உங்களுக்கு நிகழும் அற்புதம்!

1 comment:

Anonymous said...

RESPECTED

PARA BRAHMA SWAROOPINI,

MIND READING YOGINI,

MY MIND IS BLOWING

I COULD UNDERSTAND .BUT

STILL??????????

THANK YOU VERYMUCH BALAMMA



THANK YOU VERYMUCH