Thursday 5 September 2013

குருவாரம் குருவார்த்தை -42

 
 
 
மனிதர்கள் பலரும் மலர்களை ரசிக்கிறார்கள். பழங்களின் சுவையைப் பாராட்டுகிறார்கள்.செல்லப் பிராணிகளைக் கூடக் கொஞ்சுகிறார்கள்.ஆனால் தாவரங்களை,மரங்களை முழுமையாக நேசிப்பதில்லை.அவற்றின் பயன்களை மட்டுமே பார்க்கிறார்கள்.ஏனிந்த நிலை?

 
மனிதர்களின் உலகம் வார்த்தைகளால் ஆனது.எல்லாவற்றுக்கும் நேரடி பதில்களையும் உடனடி எதிர்வினைகளையும் அடிப்படையான உரையாடல்களையும் எதிர்நோக்கியே பழகி விட்டார்கள். ஆனால் தாவரங்களைப் பொறுத்தவரை அவற்றின்தன்மைகள் மிகவும் சூட்சுமமானவை. அவைஇசைக்கு எதிர்வினையாற்றுகின்றன. இதமான தீண்டலுக்கு எதிர்வினை ஆற்றுகின்றன.தாவரங்களிடம் நீங்கள் அன்பு காட்டினால் அவை நன்கு வளர்கின்றன.உங்கள் பரிவுக்கு தங்கள் பசுமையின் வழியாக பதில் சொல்கின்றன.ஆனால் மனிதர்கள் இந்த உண்மைகளைத் தவற விடுகிறார்கள்.

மனிதர்கள் சொல்வதை ஓரளவு புரிந்து கொள்ளும் தன்மையிலிருப்பதால் செல்லப் பிராணிகள் மனிதர்களுக்குப் பிடித்தமானவையாய் இருக்கின்றன.ஆனால் பண்டைய காலங்களில் ரிஷிகளும் முனிவர்களும் அடர்ந்த வனங்களில் தவங்கள் புரிந்தனர். சிங்கம் புலி போன்ற விலங்குகள் இருக்கும்.ஆனால் அவை  தொந்தரவு செய்யாது.ஏனெனில் அவற்ருக்கு அந்த மகான்களிடம் வெளிப்படும் நல்லதிர்வுகள் புலப்படும்.எனவே அவர்களை தாக்கியிராது.மாறாக அவர்களுக்குக் காவலிருந்திருக்கும்.ஆனால் அவற்றை வேட்டையாடலாம் என்பது போன்ற எதிர்நிலை உணர்வுகளுடன் மனிதர்கள் நுழைகிறபோது அவை தாக்குகின்றன. எனவே மனிதர்கள் அவற்றை கொடிய விலங்குகள் என்று அழைக்க முற்படுகிறார்கள்.எனவே தாவரங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள மிகவும் சூட்சுமமான மனநிலை தேவை.வெறுமனே வாழ்க்கைக் கணக்குகள் நிறைந்தவர்களுக்கு அது சாத்தியமில்லை.
 
ஒருவர் மலர்களை ரசிக்கிறார் பழங்களை சுவைக்கிறார் என்றாலே, அவற்றை உருவாக்கித் தருகிற மரங்கள் எவ்வளவு புனிதமானவை என்கிற புரிதல் அவருக்கு இருக்க வேண்டும்.மாறாக மனிதர்கள் மரங்களை வெட்டுகிறார்கள்,ஆனால் மலர்களை ரசிக்கிறார்கள் என்பதே அபத்தமான முரண்.மனித மனம் சூட்சுமமான தன்மைக்கு உயர உயர மரங்கள் நேர்மறை அதிர்வுகளையும் அன்பையும் மட்டுமே வெளிப்படுத்துவதை உணர முடியும்.

No comments: