Thursday 12 September 2013

குருவாரம் குருவார்த்தை​-43


கேள்வி : ஒரு மனிதர் தனக்கென்று சில கனவுகளையும் இலட்சியங்களையும் வகுத்திருக்கிறார். முயற்சியின் மூலம் அவற்றை அடையவும் செய்கிறார். தான் அடைந்த வெற்றிகளுக்கு கடவுளுக்கோ ஆன்மீகத்திற்கோ சம்பந்தமில்லையென்று அவர் எண்ணினால் அது சரியா? இது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?




நீங்கள் ஒரு கனவை வகுத்துக் கொண்டு வேலை பார்க்கும்போது அதில் கடவுளுக்கும் பங்கு வேண்டும் என்று எண்ண வேண்டுமா என்ன?அது உங்கள் கனவு.உங்கள் இலட்சியம்.உங்கள் கனவையும் இலட்சியத்தையும் பற்றி நீங்கள் சில கனவுகளை வளர்த்துக் கொள்கிறீர்கள்.அந்தக் கனவுகள் வலுப்பெறும்போது அந்த இலட்சியத்தை எட்ட வேண்டும் என்னும் உந்துதலும் தீவிரமாகிறது. நீங்கள் எவ்வளவு தூரம் கனவு காண்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் இலட்சியம் வலிமையடைகிறது.இந்தத் தீவிரம் பெருகப் பெருக நீங்கள் உங்கள் இலட்சியத்தை நெருங்குகிறீர்கள்.

எந்த இலட்சியமாக இருந்தாலும் நீங்கள் அதனை எட்டியே தீர வேண்டும்.இல்லையென்றால் அப்படியொரு இலட்சியத்தை நீங்கள் வளர்த்துக் கொள்ளாமலேயே விட்டு விடலாம்.இல்லையென்றால் அந்த இலட்சியம் உங்களை உறுத்திக் கொண்டேயிருக்கும்.அந்த உறுத்தலிலிருந்து தப்பிக்க ஒரே வழி அந்த இலட்சியத்தை எட்டிவிடுவதுதான்.

அடிப்படையில் பார்த்தால் கனவுகள் என்பவை,வலிமையும் செயல்திறனும் மிக்க கருவிகள்.நீங்கள் எதற்கு வேண்டுமானாலும் கனவு காணலாம்.சுவையான உணவைச் சாப்பிடுவதிலிருந்து சொந்தமாக ஒரு வீடு கட்டுவது வரை எதை வேண்டுமானாலும் நீங்கள் கனவு காணலாம்.ஒருவரை  விரும்பி திருமணம் செய்வது உங்கள் கனவாக இருக்கலாம்.அல்லது ஒரு தொழிலைத் தொடங்கி நடத்துவது உங்கள் கனவாக இருக்கலாம். எனவே உங்களுக்கென்றொரு கனவும்,அதை நோக்கிய தீவிரமான ஆர்வமும் இருந்தால் அது நல்லதுதான்சமூக அளவிலோ சிந்தனை அளவிலோ உணர்வுரீதியிலோ நீங்கள் வகுத்துக் கொண்ட கனவுக்கு நீங்கள் போதிய கவனம் செலுத்தா விட்டால் வேரெதிலும் கவனம் செலுத்த விடாமல் அந்தத் தீவிரமே உங்களை ஈர்த்து நீங்கள் அவற்றை எட்டும்படி செய்துவிடும்.

இப்போது, இதில் ஆன்மீகம் எங்கே வருகிறதென்று கேட்கிறீர்கள்.நீங்கள் அறிந்திருந்தாலும் அறியாவிட்டாலும்,ஆன்மீகம் உங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அங்கம் வகிக்கிறது.அந்த அம்சம் உங்களுக்குள் இருக்கிறது என்பது கூட உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் நீங்கள் எட்ட வேண்டிய கனவுகள் குறித்தும் அடைய வேண்டிய இலட்சியங்கள் குறித்தும் இடையறாமல் உங்களுக்கு நினைவுபடுத்தி உங்களை ஊக்குவிக்கிறது.அந்த இலட்சியங்களை நீங்கள் எட்டிய பிறகு உங்களுக்குள் ஒரு வெறுமை ஏற்படுகிறது. அப்போது, இலட்சியங்கள் என்பவை வாழ்வின் ஓர் அங்கம் மட்டுமே என்ற தெளிவு உங்களுக்கு வருகிறது.உங்களுக்குள் இடையறாமல் இயங்குகிற இந்த நினைவூட்டலுக்குத்தான் ஆன்மீகம் என்று பெயர்.  

 

 

No comments: