Thursday 14 November 2013

குருவாரம் குருவார்த்தை-50

                                                    உள்முகமாய் காணுங்கள்

மனிதர்களில் பலருக்கும் முக்காலமும் தொந்தரவு தருவதாக இருப்பதுதான் விசித்திரம்.நடந்து முடிந்த சம்பவங்களின் ஞாபகங்கள் தொந்தரவு செய்கின்றன.நடந்து கொண்டிருக்கும் நிகழ்கால விஷயங்கள் தொந்தரவு செய்கின்றன.எதிர்காலம் குறித்த அச்சங்களும் தொந்தரவு செய்கின்றன.தெளிவின்மைதான் இதற்குக் காரணம். இந்தத் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன என்று தெரிந்தால் உடனுக்குடன் அவற்றிலிருந்து வெளிவந்து விட வேண்டும்.

இல்லையென்றால் நீங்கள் வழக்கமாக செய்து வரும் தொழிலிலும் வேலையிலும் கூட அடுத்த கட்டமாக என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப்போய் நிற்பீர்கள்.இங்கே உங்கள் கண்களை மறைப்பது தடுமாற்றம்தான். புதிதாக மேற்கொள்ளும் ஒரு செயலில் தடுமாற்றம் வருகிறது என்றால் அது இயல்பான விஷயம். ஆனால் எப்போதும் செய்து கொண்டிருக்கிற வேலையில் தடையும் தடுமாற்றமும் வருகிறதென்றால்,அது உள்ளே இருந்துதான் வருகிறது.

இந்தத் தடுமாற்றத்திலிருந்து வெளியே வருவதற்கு வழி,உங்கள் கண்களை மூடி அகக்கண்ணைத் திறப்பதுதான்.இங்கேதான் உலகியல் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் ஆன்மீகம் எவ்வளவு அவசியம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நீங்கள் கண்களை மூடி உள்ளே பார்க்கிறபோது கண்மூடித் தனமாக் செயல்பட்ட நிலை மாறி விழிப்புணர்வு வருகிறது. கண்களை மூடுவதால் வருகிற விழிப்பு நிலை இது.
இப்படித்தான் முந்தைய காலங்களில் மனிதகுலத்தின் சிக்கல்களுக்கான தீர்வுகளை ஞானிகள் கண்களை மூடிக் கண்டறிந்தார்கள்.

உதாரணமாக,முந்தைய காலங்களில் மனிதர்களுக்கு பலவிதமான நோய்கள் வரத்தொடங்கிய போது சித்தர்கள் தங்கள் உள்ளுணர்வால் அந்த உபாதைகளுக்கென்று எத்தனையோ தீர்வுகளைக் கண்டறிந்தார்கள்.நான் சொல்வது மருந்துகளை மட்டுமல்ல. வாழ்க்கைமுறையில் மாற்றம் உட்பட ஏராளமான தீர்வுகளை உருவாக்கினார்கள்.அவையெல்லாம் இன்று விஞ்ஞானிகளாலும் மருத்துவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

தர்க்க அறிவை மட்டுமே வளர்த்துக் கொண்டிருக்கும் சில அறிவாளிகளால் மனதின் ஆற்றலைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காகவே சில உண்மைகள் இல்லையென்று ஆகிவிடாது. புராணங்களில் கோள்கள் இப்படித்தான் இருக்கின்றன. சிவந்த நிறத்தில் ஒரு கிரகம் இருக்கிறது,அதில் புயலடிக்கிறது  என்றெல்லாம் வரும்.இவற்றை  இன்று விஞ்ஞானம் உண்மையென்று சொல்கிறது.செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உண்டா என்கிற ஆய்வே நடக்கிறது.
இதை விஞ்ஞானம் ஒப்புக் கொண்டிராவிட்டால் புராணங்கள் வெறும் கற்பனை என்று முத்திரை குத்துவார்கள். ஆன்மீகம்,மெய்ஞானம் எதையெல்லாம் நோக்கிச் செல்கிறதோ அதையெல்லாம் நோக்கி விஞ்ஞானம் வந்தே தீரும்.எனவே உங்கள் சிக்கல்களுக்கான தீர்வுகளை மெய்ஞானத்தில் தேடுங்கள். விஞ்ஞானம் வந்து சொல்லட்டும் அதுவரை காத்திருப்பேன் என்று நீங்கள் எண்ணினால் அது உங்கள் விருப்பம்.ஆனால் ஒன்று...நீங்கள் வந்து சேர்வதற்காக மெய்ஞானம் காத்திருக்காது


No comments: