Friday 6 December 2013

குருவாரம் குருவார்த்தை​-53

பிறருக்கு உதவுவதைப் பற்றி எல்லா சமயங்களும் வலியுறுத்துவது ஏன்?
 
 



ஓரளவு நுட்பமாக இருப்பவர்கள், பிறரிடமிருந்து பெறுவதை விட பிறருக்குத் தருவதில் இருக்கும் மகிழ்ச்சி இரண்டு மடங்கு அதிகம் என்பதை உணர்வார்கள்.பகிர்ந்து கொண்டவற்றின் பட்டியலை நினைவு கூர்ந்தால்,பிறருக்கு உதவிய நினைவுகளே பசுமையான நினைவுகளாக இருக்கும்.அன்பைக் கொடுப்பதில் ஆகட்டும்,இருப்பதைப் பகிர்ந்து கொடுப்பதில் ஆக்ட்டும்,பிறருக்கு உதவிய தருணங்களாகட்டும்,நினைக்கும் பொழுதெல்லாம் மகிழ்ச்சி தருபவை அத்தகைய தருணங்கள்தான்.

கொடுப்பதன் மூலம் அமைதியையும் ஆனந்தத்தையும் நீங்கள் உணரத் தொடங்குகிறீர்கள்.அதேநேரம் மனிதர்களுக்குள் இருக்கும் சில தடைகள், அவர்களைக் கொடுக்க விடாமல் தடுக்கிறது.கொடுக்கும் குணம் என்பது மனதின் விசாலத்துடன் தொடர்புடையது.உங்கள் எண்ணங்கள் குறுகியவையாக இருக்கும் போது ஏன் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் எழுகிறது.

சுயநலமுள்ளவர்கள், கொடுப்பதால் தாங்கள் எதையோ இழப்பதாகக் கருதுவதுடன்,பணத்தையோ,வளத்தையோ,
மகிழ்ச்சியையோ கூடப் பகிர்ந்து கொள்ளத் தயங்குகிறார்கள்.ஒருவேளை அவர்கள் யாருக்காவது எதையாவது தர நேர்ந்தால் கூட,தந்த பிறகு ஏன் தந்தோம் என்று வருந்திக் கொண்டிருப்பார்கள்.சிலர் மிகவும் யோசித்து தாங்கள் பிறருக்குக் கொடுக்காமல் இருப்பதற்கான தர்க்க நியாயங்களைப் பட்டியலிடுவார்கள்.சிலர் கொடுத்துவிட்டு அதன்வழி பெயரும் புகழும் பெற நினைப்பார்கள். கொடுததற்காக பெயர் வர வேண்டுமென எண்ணுவது,ஒருவகையில் பார்த்தால் தவறில்லை.

சிலர் தங்களின் அடுத்த பிறவிக்கு உதவும் புண்ணியம் தேடும் பொருட்டு உதவி செய்வார்கள்.எப்படிப் பார்த்தாலும் கொடுப்பது என்பது,உங்கள் மனப்பான்மையுடன் தொடர்புடையது. இல்லாதவர்கள் பாலும் மற்றவர்கள் பாலும் உங்களுக்கிருக்கும் அன்பின் வெளிப்பாடு அது.
அதற்கு உங்கள் உள்நிலையில் தூய்மை மிகவும் அவசியம்.ஆக்கபூர்வமான அன்பு மிகவும் அவசியம்..கணக்குப் போடுகிற போது உங்களால் கொடுக்க முடியாது.கொடுப்பதன் சுகமும் புரியாது.பிறர்மேல் இருக்கும் பரிவால் நிகழ்வதே கொடை.
பிறருக்கு ஏன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுமெனில், ஏன் வாழ வேண்டும் என்கிற எதிர்க்கேள்வியைத்தான் எழுப்ப முடியும்.ஆனால் கொடுப்பதன் அவசியத்தை ஆன்மீகம் வலியுறுத்துவதற்குக் காரணம்,அது ஆனந்தத்தையும் அமைதியையும் நீங்கள் உணர்வதற்கான ஒரு வழியைக் காட்டுகிறது.கொடுப்பதன் இன்பத்தை நீங்கள் உணர்ந்தால்,அது உங்களை தன்க்கான கருவியாகவே ஆக்கிக் கொள்கிறது.பலரும் தங்களால்,தங்க்ள் பெற்றோரிடமோ,வாழ்க்கைத் துணைவரிடமோ, பிள்ளைகளிடமோ நண்பர்களிடமோதான் அன்பு காட்ட முடியுமென்று நினைக்கிறார்கள். உங்கள் அன்பை இன்னும் பெரிய வட்டத்திற்குப் பகிர்ந்தளிக்க முடியும் என்பதை கொடுப்பதன் மூலம் கண்டுணர்கிறீர்கள்.
இதன் அடிப்பட்டையாய் இருக்கும் ஒரு விஞ்ஞான உண்மையை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அன்பைப் பகிர்வதன் மூலம் அதிக அன்பைப் பெறுகிறீர்கள்.
செல்வத்தைப் பகிர்வதன் மூலம் அதிக செல்வத்தைப் பெறுகிறீர்கள்
அதிகம் தருகிற போதெல்லாம் அதிகம் பெறுகிறீர்கள்.
உங்கள் இதயத்திலிருந்து கொடுங்கள்.சிந்தனையிலிருந்து கொடுக்காதீர்கள்.
கொடுப்பதன் ஆனந்தத்தை நீங்கள்தான் அனுபவிக்கப் போகிறீர்கள்.
 
 
 
 

No comments: