Thursday 14 March 2013

குருவாரம் குருவார்த்தை-19


கடந்தவாரம் மஹாசிவராத்திரி குறித்துப் பேசும்போது சிவதாண்டவம் பற்றி சொன்னீர்கள். இதுபற்றி மேலும் விளக்கமாகக் கூற முடியுமா?


From a Homa, at Bala peetham

தாண்டவத்திற்கு இரண்டு வகையான வெளிப்பாடுகள் உண்டு. ஒன்று உள்நிலையிலான தாண்டவம். இன்னொன்று வெளிநிலையிலான
தாண்டவம். பரதநாட்டியம், கதக் போன்ற எண்ணற்ற நாட்டிய வகைகள்
வெளிநிலை வெளிப்பாடுகள் கொண்டவை.உள்நிலை தாண்டவம் பற்றி
மட்டும் இப்போது பார்க்கலாம்.

வாழ்க்கை என்பதே ஒரு நடனம்தான். உங்கள் உள்நிலையில் ஒலிக்கும் விதம்விதமான தாளங்களுக்கேற்ப இந்த நடனம் நிகழ்கிறது. உள்ளே ஒலிக்கும் இந்தத் தாளங்கள்  ஒவ்வொருவருக்குள்ளும் விதம்விதமான நடனங்களை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. சிலசமயங்களில் அந்த நடனம் அற்புதமாக இருக்கிறது. சில சமயங்களிலோ கோணல் மாணலாக நிகழ்கிறது. உள்ளே நிகழும் எண்ண ஓட்டங்களும்,எண்ண ஓட்டங்களில் நிகழும் மாற்றங்களுமே அந்த நடனங்களின் இயல்பைத் தீர்மானிக்கின்றன. 

 அதேபோல, வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் மாற்றங்களே இந்த உள்நிலை நடனத்தின் போக்கைத் தீர்மானிக்கின்றன. அந்த நடனம் துரித கதியில் நிகழ்வதும், மந்தமாக நிகழ்வதும், வாழ்வின் வெவ்வேறு சூழல்களுக்கேற்ப நிகழ்வதால்,அதில் எத்தனையோ வித்தியாசங்களும் ஏற்றத் தாழ்வுகளும் வருகின்றன.ஒருவர் தன்னுடைய உள்தன்மையில் சமநிலையை நெருங்கும் போதெல்லாம், அந்த நடனத்தில் சமநிலை ஏற்படுகிறது. சிவனின் நடனம் ஆனந்த நடனம். இந்தப் பிரபஞ்சத்துக்கான பூரணமான ஆனந்ததாண்டவம். ஒருவர் அந்த முழுமையான நிலையை நோக்கி முதிரவும் மலரவும் வேண்டும்.

 உள்நிலை தாளங்கள் பற்றிப் பேசும்போது அவற்றிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று தீவிரமான உணர்வுகளின் அடிப்படையிலான ஆண்தன்மை கொண்டது. இதனை உக்ரதாண்டவம் அல்லது ருத்ரதாண்டவம் என்கிறோம். இன்னொன்று பெண்மையின் அம்சங்களாகிய மென்மை,தாய்மை,அன்பு பரிவு ஆகியவற்றின் வெளிப்பாடு. இதற்கு லாஸ்யம் என்று பெயர்.யோக மரபில் பெண்தன்மையை இடகலை என்றும் ஆண்தன்மையை பிங்கலை என்றும் குறிக்கிறோம். இந்த இருவேறு சக்திநிலைகளின் சங்கமமே ஒவ்வோர் உயிருக்குள்ளும் நிகழும் மூல நடனம்.

மஹாசிவராத்திரியன்று இந்த இரு சக்திகளும் சங்கமமானதைக் குறிக்கவே சிவனும் சக்தியும் திருமணத்திற்குப் பிறகு ஆனந்ததாண்டவம் ஆடியதாக சொல்லப்படுகிறது.தன்னுடைய உள்நிலையில் ஒலிக்கும் தாளத்தின் தன்மையை உணர்ந்து கொண்டால், தங்கள்சக்தி நிலையிலேயே சிவசக்தி ஐக்கியத்தின் தாண்டவம் நிகழ்வதை  ஒவ்வொருவரும் உணரலாம்.

No comments: