Thursday 9 May 2013

குருவாரம் குருவார்த்தை-27


(2013 மே மாதம் 4ஆம் நாள் ஸ்ரீ பாலரிஷி விஸ்வசிராசினி அவர்கள்,கோவை லீ மெரீடியன் கலையரங்கில்,பன்னாட்டு அரிமா சங்கம் நிகழ்த்திய அரிமா தலைவர்களுக்கான ஒருங்கிணைந்த மாநாட்டில் "மனிதநேயம்" என்னுந் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அந்த உரையின் சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்)

எத்தனையோ இடங்களில் மனிதநேயம் என்பது ஓர் எண்ணமாக மட்டுமே எழுந்து அந்த அளவிலேயே காணாமல் போய்விடுகிறது.சில இடங்களில் மனித நேயம் குறித்து பலவும் பேசப்பட்டு, வெறும் சொல்லளவிலேயே நின்று விடுகிறது.ஆனால் அந்த எண்ணமும் சொல்லும் எங்கே செயல்வடிவம் பெறுகிறதோ அங்கேதான் மனிதநேயம் முழுமை பெறுகிறது.
மனிதர்கள் சக மனிதர்களிடம் அன்பு செலுத்தும்போதும் அதை மனிதநேயம் என்றுதான் அழைக்கிறோம்.பறவைகளிடமும் விலங்குகளிடமும் சக உயிரினங்களிடமும் அன்பாக இருக்கும் போதும் அதை மனிதநேயம் என்றுதான் அழைக்கிறோம். எனவே மனிதநேயம் என்பதே மனிதகுலத்தின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்பது இதன்மூலம் புலனாகிறது.
அன்பு கோபம் போன்ற பலவிதமான உணர்ச்சிகளை பறவைகளும் விலங்குகளும் கூட
வெளிப்படுத்துகின்றன.அவையெல்லாம் ஓர் உந்துதலின் விளைவாய் வெளிப்படுபவை.
ஆனால் மனிதநேயத்துடன் திகழ வேண்டும் என்ற தீர்மானத்தை உள்நிலை விழிப்புணர்வுடன் வெளிப்படுத்துவது மனிதர்களுக்கே சாத்தியம். சமீபத்தில் ஊடகமொன்றில் ஓர் உண்மைக்கதை வெளியானது. அயல்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், பூனை வளர்ப்பில் அதீத ஆர்வம் கொண்டு செயல்பட்டார். பூனைகள்பால் கொண்ட அளவு கடந்ய்த அன்பால் அவற்றுக்குத் தன் வீட்டில் இடம் கொடுத்து உணவளித்தார். ஒரு நேரத்தில் பார்த்தால் பெரிதும் சிறிதுமாய் அவர் வீட்டில் 81 பூனைகள் வளர்ந்தன. இது ஒருவிதமான மன அழுத்தத்தின் வெளிப்பாடு என்று நிபுணர்கள் கருதினாலும் அந்தப் பெண்ணின் செயலில் ஒரு தீவிரம் வெளிப்பட்டது. மனிதநேயத்தை
 பொறுத்தவரை ஆக்கபூர்வமானஅணுகுமுறையுடன் கூடிய தீவிரம்தான் உடனடித் தேவையாக உள்ளது.

பொதுவாகப் பார்த்தால்,சிலருக்கு அன்பும் பரிவும் பராமரிப்பும் அளவின்றிக் கிடைக்கும்
விதமாக அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கிறது.சிலருக்கோ அத்தகைய மென்மையான தன்மைகள் எதுவும் கிடைப்பதில்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வு சமூகத்தில் நிகழ்வது போலவே மனிதநேயத்திலும் ஏற்றத்தாழ்வான சூழல் நிலவுகிறது. இன்று பல விளம்பரங்களில் சில தயாரிப்புகளை வாங்கினால் வசீகரமான சலுகைகள் வழங்கப்படுமென அறிவிக்கிறார்கள். ஆனால் அந்த அறிவிப்பின் அருகிலேயே ஒரு நட்சத்திரக் குறி இருக்கும். விளம்பரத்தின் கீழ்ப்பகுதியில் பார்த்தால் "நிபந்தனைகளுக்கு உட்பட்டது"என்னும் சிறுகுறிப்பு இருக்கும். அதுபோல் மனிதநேயமும் ஒரு வர்த்தக செயல்பாடாகக் கருதப்பட்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக ஆகிவிட்டது.நிபந்தனை இன்றி ஏற்கும் தன்மையும் அன்புகாட்டும் தன்மையுமே மனிதநேயத்தை நிலைநிறுத்த வல்லவை. இப்போதைய உடனடித் தேவையும் அதுதான். 

இல்லாதவர்களுக்கு உதவுவது என்பதும் மனிதநேயத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று.
இதில் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.யாரோ ஒருவருக்கு ஏதோ ஒன்று தேவைப்படுவதால் மட்டும்நீங்கள் கொடுப்பதில்லை. அவருக்கும் கொடுப்பதன் மூலம்
உள்நிலைத் தூய்மைக்கு வழிவகுத்துக் கொள்ளும் தேவை உங்களுக்கும் இருக்கிறது.
எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஈகை புரிந்ததற்கான அங்கீகாரத்தையோ பாராட்டையோ எதிர்பாராமல் கொடுக்கிற இயல்புதான் மனிதநேயத்தின் உண்மையான வெளிப்பாடு. இது   கர்மயோகமாகவே கருதப்படக்கூடியது.




பலரும் தங்களிடம் நெருக்கமாக இருப்பவர்களிடம் அன்பாக இருப்பதைத்தான் மனிதநேயம் என்று கருதுகிறார்கள்.இன்னும் பலரோ தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளிடம் அன்பாக இருப்பதை மனிதநேயம் என்று கருதுகிறார்கள். இவையெல்லாம் மனிதநேயத்தின் மிகவும் மேலோட்டமான அம்சங்கள். முன்பின் தெரியாதவர்களையும் மனிதநேயத்துடன் நடத்தும்போது அந்த அன்பு நுட்பமான நிலையை அடைகிறது. அனைத்து உயிரினங்களையும் நீங்கள் மனிதநேயத்துடன் அணுகும்போது அந்த அன்பு அதிநுட்பமான தன்மையை அடைகிறது.
அன்பு செலுத்துவதும் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதும் உங்கள் செயலாக மட்டும் இல்லாமல் அதுவே உங்கள் உயிர்த்தன்மையாக ஆகும்போது மனிதநேயம் அதிசூட்சுமமான தன்மையை அடைகிறது. ஒவ்வொருவரும் தங்கள் உள்நிலையில்
அத்தகைய நிலையை அடைவதே மிகவும் முக்கியம்.

No comments: